கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.
இதுமட்டும் இன்றி பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீச்சு தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், அதே நேரத்தில் பள்ளியை பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் சேதப்படுத்தியதை ஏற்று கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெற்றோர்கள் என்ற போர்வையில் சமூக விரோத கும்பல் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த பள்ளியில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்று நிகழாத வகையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இதனால் நாளை ஒரு நாள் முழுவதும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








