நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பு கல்வியாண்டில் தனியார்கள் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 6 தவணைகளாக கட்டணத்தை வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் செலுத்தாதை காரணம் காட்டி, மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கவோ, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவோ தடை விதிக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, கட்டணம் செலுத்தாத காரணத்தால், மாணவர்களை நீக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.







