சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்குவதின் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டது Gross Cost Contract க்கான ஒப்பந்தம் அல்ல, ஆலோசகர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியே வெளியீடு ஆகும். சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே ஒப்பந்தப்புள்ளி. நாளையே தனியார் பேருந்துகள் இயக்கம் என்ற பதற்றத்தை ஏற்படுத்துவது தேவையில்லாத செயல்.
போக்குவரத்துத் தேவைக்காக இப்படி ஒரு முறையை உலக வங்கி பரிந்துரைக்கிறது. அதில் சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும். அரசு நடத்துநர்கள் இருப்பார்கள், ஒட்டுநர் தனியார் நிறுவனத்தை சார்ந்தவர் இருப்பார்.
அரசு போக்குவரத்துக்கழகம், தனியார் என்றிருப்பதை இருவரும் இணைந்து செயல்படும் புதிய முயற்சியை உலக வங்கி வழங்கியுள்ளது. இதனை ஆய்வு செய்து அரசு முடிவெடுப்பதற்கு காலம் உள்ளது. இந்த புதிய முடிவின் மூலம் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது. இதனால் தொழிலாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
போக்குவரத்து ஊழியர்கள் அதே நிலையில் தொடர்வார்கள். பேருந்துகளை அரசுடமையாக்கியது கருணாநிதி தலைமையிலான அரசு. அதே நிலையையே மு.க. ஸ்டாலினும் தொடர்வார். அரசின் நிதி நிலைமைக்கு யார் உதவி வழங்குகிறார்களோ? அதற்கு ஏற்ப விதிமுறைகளை அளிக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் தான் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. உலக வங்கியின் நிபந்தனைக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும் என அரசாணை உள்ளது. ஆனால் இதனை திமுக கொண்டு வருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது. இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது” என தெரிவித்தார்.
– யாழன்