RRR படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு டெல்லியில் உள்ள தென்கொரிய துாதரகத்தில் பணியாற்றுபவர்கள் கலக்கலான குத்தாட்டம் போட்ட விடியோவை பார்த்த பிரதமர் மோடி அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் ஆர்.ஆர்.ஆர். பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, உலகளவில் சுமார் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சக்கைப்போடு போட்ட இப்படம் பல தரப்பினரையும் கவர்ந்திருந்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்
பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த நடன அசைவுகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்து, பல்வேறு விருதுகளையும் தொடர்ந்து அள்ளி
வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வரிசையில் ஜனவரியில் நடந்த 80-வது கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடலாக எம்.எம். கீரவாணி இசையமைத்த தெலுங்கு மொழிப் பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகி வரலாறு படைத்திருந்தது. இது தவிர உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ”நாட்டு நாட்டு” பாடலுக்கு டெல்லியில் உள்ள தென் கொரியா தூதர் சாங் ஜே போக்குடன் தூதரக ஊழியர்கள் உற்சாகமாக துள்ளல் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த விடியோவானது தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு சில மணி நேரங்களிலேயே சுமார் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரல் ஆனதோடு, நெட்டிசன்கள் பலரும் கொரிய தூதரக ஊழியர்களின் நடனத்தை பாராட்டி பதிவிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடியும் ‘உயிரோட்டமான, அற்புதமான குழு முயற்சி’ என தம்ஸ்அப் எமோஜியுடன் தென் கொரிய தூதரக பணியாளர்களின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பி.ஜேம்ஸ் லிசா