டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெறும் நிலையில், குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோா்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். 9ஆம் தேதி நடைபெறும் விருந்தில் பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.







