குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவாகியுள்ள நிலையில், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு செல்லாத வாக்காக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்லாத வாக்கை யார் செலுத்தியது? எந்த அணியைச் சேர்ந்தவர் என காணலாம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் சார்பாக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்காவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இதில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை விரிவாக காணலாம்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யார் ஆதரவு?
234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவாக கட்சிகளின் உறுப்பினர்கள் -159, திரவுபதி முர்முவிற்கு ஆதரவளித்த கட்சிகளின் உறுப்பினர்கள் – 75.
திமுக 124, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18, விசிக 4, கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மதிமுக 4, மமக 2, தவாக 1, கொமதேக 1, சபாநாயகர் – 1
அதிமுகவிற்கு 65, கூட்டணி கட்சியான பாஜக 4, புரட்சி பாரதம் 1, திரவுபதி முர்முவிற்கு ஆதரவளித்த பாமக சார்பாக 5 என 75 உறுப்பினர்கள்.
வாக்கு மதிப்பும் & பதிவும்
தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்கு மதிப்பு 176.
234 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் ஒரு உறுப்பினரின் வாக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. 233 *176 = 41,008 வாக்குகள் தேர்தலில் பதிவாகியுள்ளது.
யஷ்வந்த் சின்காவிற்கு விழுந்த வாக்குகள் 27,808 (158). திரவுபதி முர்முவிற்கு விழுந்த வாக்குகள் 13,200 (75).
யார் வாக்கு செல்லாதது?
வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் திரவுபதி முர்முவிற்கு ஆதரவளித்த கட்சிகளின் உறுப்பினர்களின் வாக்குகள் முழுவதும் அவருக்கு கிடைத்துள்ளது.
யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவளித்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் வாக்குகள் முழுமையாக செல்லாமல், ஒரு உறுப்பினரின் வாக்கு குறைவாக கிடைத்துள்ளது.
இதன்மூலமாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு உறுப்பினரின் வாக்கு செல்லாத வாக்காக செலுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கட்சி கொறடாவின் உத்தரவின் அடிப்படையில்தான் வாக்கு செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் குடியரசுத் தலைவர் தேர்தலில் இல்லாவிட்டாலும், விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம். இருப்பினும் ஒரு வாக்கு என்ற நிலையில் இருப்பதால், அது திமுக கூட்டணியைச் சேர்ந்தவராக இருக்கலாம், யார் அந்த உறுப்பினர்? என்ற கேள்வி எழுந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.