ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி இளவரசரை சந்திக்கும் திட்டம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபெக் (OPEC) எனும் அமைப்பில் அங்கம் வகிக்கும் சவுதி அரேபியா, ரஷ்யா போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெயின் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைத்துள்ளன. இதன் எதிரொலியாக 75 டாலராக இருந்த ஒரு பேரல் தற்போது 90 டாலராக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே பணவீக்க பிரச்னையில் உள்ள அமெரிக்காவுக்கு இந்த விலையேற்றம் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒபெக்கின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா மீது அமெரிக்கா கோபமடைந்துள்ளது.
இதற்கிடையே, இந்தோனேசியாவின் பாலி தீவில் வருகிற, நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி இளவரசரைச் சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்துள்ளார்.







