நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டடத்தை இடிப்பதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. இதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 தளங்களும் உள்ளன.
இந்நிலையில், இந்த கட்டுமானமானது சுற்றுசூழல் விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இந்த அடுக்குமாடி கட்டிடமானது கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்படவுள்ளது. இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிப்பதற்காக சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை கோபுரத்தை இடித்தப்பின் கழிவுகளை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வெடிபொருள் வைத்து தகர்த்தால் இது 9 நொடியில் தரைமட்டமாக்கப்பட உள்ளது.







