நிலவில் ‘பிரக்யான்’ ரோவர் அதன் பணிகளை நிறைவு செய்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவில் ஆகஸ்ட் 23ம் தேதி தரையிறங்கிய சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிலவில் ‘பிரக்யான்’ ரோவர் அதன் பணிகளை நிறைவு செய்துள்ளதால், தற்போது அது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ‘ஸ்லீப் மோட்’ நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், நிலவில் அடுத்த சூரிய உதயத்தின்போது ஒளியைப் பெரும் வகையில் சோலார் பேனல்கள் தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் பணிகளைத் துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஒருவேளை சூரிய ஒளி படவில்லையென்றால் இந்தியாவின் நிரந்தர தூதராக ரோவர் நிலவில் இருக்கும் என்றும் இஸ்ரோ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.







