அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் பயின்ற வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் பிரக்ஞானந்தா சந்தித்தார். அப்போது தாம் வென்ற வெள்ளிப் பதக்கத்தை முதல்வரின் கையில் கொடுத்து அதனை பிரக்ஞானந்தா பெற்றுக் கொண்டார்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரக்ஞானந்தாவிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் உடன் இருந்தனர்.







