தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சில கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பிற்காக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சேதம் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் மிண்டனாவோ தீவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகருக்கு தென்மேற்கே 13 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவலின்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் சில கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும். மேலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில கடலோரப் பகுதிகளில் 1 மீட்டர் (3 அடி) உயரம் வரை அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




