தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடம், பாலம் இடிந்து விழுந்து, சேதம் மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தென்கிழக்கு தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. Taitung நகரில் 30 மைல் தொலைவில் கடலோர பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கி, உள்ளே இருந்த பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும், ஜப்பான் வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஹூவாலியன் Country-இல் உள்ள யுலி பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதே போல் யுலியின் கிராமப்புற பகுதியில் பாலம் ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. அப்போது, அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்களும் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்று நிலநடுக்கத்தால் குலுங்கிய காட்சிகளும் சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.இதனால் அங்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் யுலி பகுதிகளில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மலைப்பகுதியில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டுள்ளனர். மேலும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் உள்விளையாட்டரங்கில் மேற்கூரை ஒன்றும் இடிந்து விழுந்தது.