கொரோனா பரவல் காரணமாக அஞ்சல் நிலையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று சுற்றறிக்கை வெளியாகி உள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,95,123 ஆக உள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகா, டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு ஊரடங்கும், கூடுதல் கடப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மற்றும் இதர செயல் முறைகளைத் தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணிவரை செயல்படும் என்று தபால் துறை சார்பில் சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த நேரக்குறைப்பு அமலில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.







