எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி கமல், ரஜினி காலத்தில் கனவாகி தற்போது கார்த்தி கையில் கனிந்திருக்கிறது வந்தியத்தேவன் கதாபாத்திரம். கிட்டத்தட்ட 4 தலைமுறை கனவு புத்தகமான பொன்னியின் செல்வம் திரைப்படமாக தயாரகிறது என சொல்லத் தொடங்கியது இணையத்தில் பரவியது புதிய வைரல் காய்ச்சல். படம் பார்க்க டிக்கெட்டுடன், இரவு முழுவதும் தயாரித்த நோட்ஸுடனே தியேட்டருக்குள் நுழைந்தனர் பொன்னியின் செல்வன் வெறியர்கள். இப்படி தொடங்கி சோழா நாடா? பாண்டிய நாடா? என்ற சண்டைகள் ஓய்ந்து தற்போது தெலுங்கு படங்கள் பெரிதா?, தமிழ் படங்கள் பெரிதா? என அடுத்த பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறார்கள் இண்டர்நெட் போராளிகள்..
அத்தனை சண்டையையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தது ஆந்திரா பாக்ஸ் ஆபிஸின் அதிகார ட்விட்டர் பக்கம் தான். பொன்னியின் செல்வன் திரைப்படம் எந்தவித ஆக்சன் காட்சிகளோ, விறுவிறுப்பான கதை விவரிப்போ இல்லாத சாதரண வரலாற்றுப் படம் எனவும், குறிப்பிடத்தக்கது எதுவும் இல்லை எனவும் ஆந்திர பாக்ஸ் ஆபிஸின் ட்விட்டர் பக்கம் கொளுத்திப்போட்டது. அதுவரை ராஜமௌலியின் படங்களை பார்த்து சிலிர்த்துப் போய் சில்லரைகளை விட்டெறிந்த தமிழ் ரசிகர்கள் இந்த பதிவுக்கு பிறகு தற்போது பொங்கி வெகுண்டெழுந்து கழுவி ஊற்றி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
70 வருட தமிழ் சினிமாவின் கனவுப்படமாக பார்க்கபட்ட பொன்னியின் செல்வனை சாதரண வரலாற்றுப்படம் என சொன்னதும், ஆந்திர பாக்ஸ் ஆபிஸின் அதிகார டிவிட்டர் பக்கத்தில் வரலாற்றுப் படத்திற்கும், ஃபேண்டசி படத்திற்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு என பொங்கிய ரசிகர்கள், பாகுபலியின் பனைமர பாய்ச்சல் காட்சியை ஆங்கிரி பேர்டு விளையாட்டுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். 100 டன் சிலையை ஒற்றைக் கையால் தாங்கி பிடிப்பது, ஓங்கி உயர்ந்த மலையை வெறும் கையால் கடப்பது, யானையளவு உள்ள காட்டெருமையை ஒரே அடியில் அடிக்குவது போன்ற காட்சிகள் இருந்தால் தான் அது வரலாற்றுப்படமா? என கேலி செய்து வரும் தமிழ் ரசிகர்கள், போதாத குறைக்கு ஆர் ஆர் ஆர் படத்தையும் சேர்த்தே செய்து வருகின்றனர்..
மங்காத்தா படத்தில் சொல்வது போல், அப்போதான் வந்தார் விநாயக் மகாதேவ் என்பது போல, குறுக்க இந்த கவுசிக் வந்தா என வந்து சேர்ந்தது பிரபாஸின் ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசர். அதுவரை வெறும் வாயை மென்று வந்த தமிழ் ரசிகர்களின் வாயிற்கு சுவிட் பீடா குடுத்தது போல அப்படத்தின் அனிமேசன் காட்சிகள் அமைந்தது தான் துரதிர்ஷ்டம். எடுடா அந்த டெம்பிளேட்டை என சகலத்திற்கும் செய்து வருகின்றனர்.
குந்தவைக்கு ஒரு குத்து பாடலும், நந்தினிக்கு ஒரு நடன காட்சியும் வைத்திருந்தால், வந்தியத்தேவனுக்கும், அருள் மொழி வர்மனுக்கும் குதிரையின் கால் உடையும் அளவிற்கு உடல் வளர்த்து இருந்தால் தான் உங்களுக்கு பிடிக்கும் என வெகுண்டெழுந்த தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு வரலாற்று புதினத்தை சிறப்பாக காட்சிப்படுத்தியதாக மணிரத்னத்தை கொண்டாடி வருகின்றனர்.
கேஜிஎப் வந்தபோதும் பாகுபலி வந்த போதும் நாங்கள் கொண்டாடினோம் என்றும் எங்கள் மீது வன்மத்தை கக்கும் தெலுங்கு சினிமாவை இனி புறக்கணிப்போம் என்று கிளம்பிய வீர தமிழ் சினிமா அபிமானிகள் BYCOT TELUGU CINEMA என்ற புதிய ஹாஸ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சேர சோழ பாண்டிய மன்னர்கள் வரலாற்றில் மோதியது மட்டுமல்லாமல், இணையத்திலும் மோதி புதிய வரலாற்றை எழுதி வருகின்றனர்..