பாக்கிப்பணம் தராவிட்டால் நடிக்க மாட்டேன் என நடிகர்களும், கடந்த கால கடனை தராவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என விநியோகஸ்தர்களும் மிரட்டுவது இந்தக்காலம். ஆனால் தமிழ்த்திரையுலகில் தனக்கு கிடைத்த லாபத்தை பங்கு வைத்த நல்ல மனசுக்காரர்கள் இருந்த காலமும் உண்டு. வாருங்கள் பார்க்கலாம்..
சிவாஜி கணேசன், சாவித்ரி, கே.வி மகாதேவன் என ஜாம்பவான்களை வைத்துக் கொண்டு யார்தான் ஹிட் படம் தர முடியாது. அந்த ஏ.பி. நாகராஜனால் ஒரு சமூகப்படம் தர முடியுமா
என அந்தக் கால விமர்சகர்கள் கேட்டதால் அவர் இயக்கிய படம்தான் தில்லானா மோகனாம்பாள் என்பது தெரியும். இதற்காக 50 ஆயிரம் ரூபாய் பெறுமான கதை உரிமைக்கு, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோமே என எண்ணி, மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாயுடன் மூலக்கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவிடம் அளித்தவர் ஏ.பி. நாகராஜன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் எம்ஜிஆர் நடித்த வெள்ளிவிழா படமான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. படம்
வெற்றிகரமாக ஓடி பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, தயாரிப்பாளர் நாகிரெட்டிக்கு பெரும் தொகைக்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பி வைத்தார். கூடுதலாகக் கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டுமல்ல, கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்தான். அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நாகிரெட்டி “நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அந்த காசோலையைத் திருப்பி அனுப்பி விட்டார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனிடம் நலம் விசாரிக்க சென்றார் எம்ஜிஆர். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில்
இருந்த கலைவாணரை எம்ஜிஆரால் பார்க்க இயலாததால், வெளியே காத்து இருந்த நடிகர் தங்கவேலுவிடம் தாம் வந்து போனதாக சொல்லச் சொல்லிவிட்டு சென்றார். மறுநாள்
விடிந்ததும் கலைவாணர், நேற்று இரவு என்னை பார்க்க எம்ஜிஆர் வந்தாரா என கேட்டுள்ளார். தங்கவேலு, ஆமாம் அண்ணே, எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க, இந்த நாட்டுல வேறு யாரு நான் தூங்கி கொண்டு இருக்கும்போது என் தலையணைக்கு கீழே கட்டுக்கணக்கில் பணத்தை வைத்துவிட்டு போகப்போறாங்க என கேட்டாராம் கலைவாணர்.
தானம் வழங்குவதில் தனது ஆசானாக கருதிய கலைவாணருக்கு, எம்ஜிஆர் காலத்தால் செய்த உதவிக்கு இன்னொரு பெயர் உண்டு, ‘பொன்மனச்செம்மல்’.