பொங்கல் திருவிழாவிற்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு கிடைத்திட முதலமைச்சர் ஆவன செய்திடுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பரிசுத் தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதிமுக ஆட்சியின்போது 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்க வேண்டும் எனக்கூறிய திமுக, ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் ரொக்கம் இல்லாமல் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்ததாக சாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 4-ஆம் தேதி முதல் வழங்கத் தொடங்கிய பரிசு தொகுப்பில், 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருப்பதாகவும், பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வரும் 31-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு, எந்த நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
எனவே, பொங்கல் திருவிழாவிற்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும், அனைத்து பொருட்களும் நல்ல முறையில் கிடைத்திட முதலமைச்சர் ஆவன செய்திட வேண்டும் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.