சென்னையில் 16 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் பழகி ஏமாற்றிய விவகாரத்தில் காவலர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் காதல் செய்து, சிறை காவலராக இருந்த மகேஷ் என்பவர் ஏமாற்றியதால் தீக்குளித்து
உயிரை மாய்த்துக் கொண்டார். இறப்பதற்கு முன் சிறுமி கொடுத்த வீடியோ வாக்குமூலத்தில் ,“தன்னை சமூக வலைதளம் மூலம் காதலித்து இரண்டுமுறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து உள்ளதாகவும் , தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும்” கூறியிருந்தார்

இந்த வழக்கை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முறையாக
விசாரிக்காமல் உயிரிழப்பு வழக்கு என பதிவு செய்து முடித்து வைத்ததை எதிர்த்து
வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார் . எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை எனக் கூறி கடந்த ஆண்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் காவலர் மகேசை கைது செய்து சைதாப்பேட்டை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மகேஷ் தற்போது மாதவரம் காவல் நிலைய காவலராக பணிபுரிந்து வந்துள்ளார் . இந்த வழக்கு போக்சோ வழக்காக மாற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .







