சென்னை தாம்பரம் அருகே போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடிகள் ரமேஷ், சோட்டா வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.
தாம்பரம் மாநகர காவல், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்ட போது, காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி கார் நின்றது.
காரின் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.







