அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று அராஜகத்தில் ஈடுபட்டதால், ஓ.பி.எஸ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில், இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்படியே ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களை சந்தித்தார். அவர் கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு அங்கு போர்களமே நடந்தது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். மேலும் வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையிலும் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சி அலுவலகத்திற்கு சென்றதோடு, அங்குள்ள தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகமடைந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று ரகளையிலும் ஈடுபட்டனர்.
அதிமுக கட்சி அலுவலகத்திற்கு உள்ளே இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வெளியே கொண்டு வந்து உடைத்ததோடு, அவரது பேனர்களையும் தீயிட்டு எரித்தனர். அதன் பின் கட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் இருக்கும் வெளிப்புற தூணில் ஓ.பன்னீர் செல்வம் படத்தை மாட்டினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் கட்சி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால், அவரது மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அவர் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்