கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கவிஞர் வைரமுத்துவின் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இவரது தாயார் அங்கம்மாள்.

இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கவிஞர் வைரமுத்துவின் தாயார் இன்று  காலமானார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து, “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவின் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.