இயக்குநர் பாரதிராஜா உடல்நலம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும், இயக்குநர் பாரதிராஜா சூழ்நிலையில், ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘குற்றமே தண்டனை’, ‘திருச்சிற்றம்பலம்’ என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இதனிடையே, நேற்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசியுள்ள அவரின் மகன் மனோஜ், “வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்குச் சென்றார். சோதனையில் உப்பின் அளவு குறைந்தால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்ததை அடுத்து மருத்துவர்கள் சில நாட்கள் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிவுறுத்தினர். அதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. சில நாட்கள் ஓய்வுக்குப் பின் வீடு திரும்புவார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார் எனத் தெரிவித்துள்ளார்.
“மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்
நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லை
சின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்
அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை
ஆண்டு வருவார்”
இயக்குநர் பாரதிராஜா விரைந்து நலம்பெற வேண்டி திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.








