புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் – பிரதமர் மோடி

மத்திய பாஜக அரசு சார்பில் கடந்த 2020ல் கொண்டுவரப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று(நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,…

மத்திய பாஜக அரசு சார்பில் கடந்த 2020ல் கொண்டுவரப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று(நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கதர்பூர் கரிடோர் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

மேலும், “நாட்டில் அதிக அளவில் சிறு விவசாயிகள் உள்ளனர், அவர்களின் நலன் மிகவும் முக்கியமானது. கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் கடும் துயரங்களையும், சவால்களை சந்தித்து வந்தனர் .

விவசாயிகள் தங்களது நிலங்களை தொடர்ந்து இழந்து வந்தனர். 2 ஹெக்க்ரேடுக்கு குறைவான நிலங்களை வைத்திருப்பவர்கள்தான் பெரும்பாலான விவசாயிகளாக உள்ளனர். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த இந்த தருணத்தில் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.

ஏனெனில் நமது விவசாயிகளின் வேதனைகளை நேரடியாகவே அறிவேன். அதனால்தான் அவர்களின் முன்னேற்றத்திற்கென பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். அரசின் புதிய திட்டங்களால் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தற்பொழுது விவசாயிகள் தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை சுலபமாக சரிசெய்யக்கூடிய இடத்தில் உள்ளனர்.

விவசாயிகள் காப்பீடு திட்டத்தின் மூலமாக அவர்களது பலன்களை நேரடியாகவே அறுவடை செய்து கொள்ள முடியும். பயிர் சேதங்களுக்காக ரூ1.லட்சம் கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் கிராமப்புற சந்தைகளை வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களை விற்பதற்கான சரியான இடம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இதனால் விளைபொருட்களுக்கான சரியான மற்றும் நியாயமான குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் பெற்று வருகின்றனர்.” என்று கூறினார்.

இதனையடுத்து, “புதிய வேளாண் சட்டங்களை சிலர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த சட்டங்கள் குறித்து புரியவைக்க வேண்டியுள்ளது. தற்போது இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசு பிரதிநிதிகளோடு விவசாய பிரதிநிதிகளும் உள்ளடங்கிய குழு அமைக்கப்படும்.” என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2022ம் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “மக்கள் போராட்டங்கள் பெற முடியாத வெற்றியை வரவுள்ள தேர்தல்களின் பயம் வென்றிருக்கிறது; பிரதமரின் அறிவிப்பு கொள்கை மாற்றத்தாலோ, மனமுவந்தோ நிகழவில்லை, தேர்தல் பயம் காரணமாகவே வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படுகின்றன” என்று பிரதமரின் அறிவிப்பை விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.