அரசின் திட்டங்கள் தொடக்கத்தில் எதிர்க்கப்படுகின்றன: பிரதமர்

மத்திய அரசின் பல திட்டங்கள் தொடக்கத்தில் எதிர்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை…

மத்திய அரசின் பல திட்டங்கள் தொடக்கத்தில் எதிர்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய அவர், மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மாநகரமான பெங்களரூவில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

சாலை விரிவாக்கம், ரயில் சேவை விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் என பெங்களூரு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து பார்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டங்களையும்கூட இன்று தான் தொடங்கிவைத்ததாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, குறித்த நேரத்தில் திட்டங்கள் முடிக்கப்பட்டிருந்தால் பெங்களூரு இத்தனை சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்காது என கூறினார்.

எனவேதான், நேரத்தை வீணாக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும் மக்கள் சேவைக்காக தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அக்னிபாத் திட்டம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு தொடங்கும் பல திட்டங்கள் தொடக்கத்தில் எதிர்ப்பை சந்திப்பதாகவும், பிறகு அந்த திட்டங்கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல உதவுவதாகவும் தெரிவித்தார். தற்போது நியாயமற்றதாகத் தோன்றும் சில முடிவுகள், எதிர்காலத்தில் தேசத்தைக் கட்டமைப்பதற்கு பங்களிப்பதாக விளங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.