பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். பிரதமர் மோடியின் தாயார் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் பிரதமர் மோடி தனது தாயாருக்கு பாத பூஜை செய்து வணங்கினார்.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி நேற்று மதியம் அகமதாபாத்துக்கு விரைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக அவர் தாயார் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார். அங்கு அவர் தாயாரைப் பார்த்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றியும் விசாரித்து அறிந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குஜராத் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








