பிரதமர் மோடியின் டீசர்ட் : திருப்பூருக்கே பெருமை – எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி திருப்பூர் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கேமோ பிளாஜ் டி சர்ட்டை  அணிந்து வந்தது திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை என எஸ் சி எம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பரமசிவம் நியூஸ்…

தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி திருப்பூர் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கேமோ பிளாஜ் டி சர்ட்டை  அணிந்து வந்தது திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை என
எஸ் சி எம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பரமசிவம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக  பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் பின்னலாடை துணி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பின்னலாடை உற்பத்தியில் சிறந்து விளங்கக்கூடிய திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் ஒரு
பெருமை சேர்க்கக் கூடிய வகையில் இந்தியப் பிரதமர் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை
நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணியை அணிந்தது பெருமையாக இருப்பதாக
பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி முதல் நாள் சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது நாள் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள பாகன் தம்பதிகளான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்தித்து உரையாடினார் .

அப்போது அவர் அணிந்து வந்திருந்த கேமோப்ளாஜ் டீ சர்ட் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ராணுவ மிடுக்கில் பிரதமர் மோடி உடை அணிந்திருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவை திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எஸ் சி எம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கேமோ பிளாஜ் டீசர்ட் என்பது தெரியவந்துள்ளது . இது குறித்து எஸ் சி எம் நிறுவன நிர்வாக இயக்குனர் பரமசிவம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக  பேட்டியில் தெரிவித்ததாவது..

” கடந்த 15 ஆண்டுகளாக கேமோ டீ சர்ட் மற்றும் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறோம்.  இந்த டீசர்ட்கள் 25 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது இந்திய  பிரதமர் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட உடையை பெங்களூரில் உள்ள டெக்லதான் ஷோரூமில்
இருந்து பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

காடுகளில் வேட்டைக்கு செல்கிறவர்கள், சுற்றிப்பார்க்க செல்கிறவர்கள், மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது. கோடை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற 100 சதவீதம் காட்டனால் தயாரிக்கப்பட்ட உடை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

வியர்வை தேங்காத வகையிலும் இயற்கையை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த வகையிலான உடையை பிரதமர் மோடி அணிந்து சென்றிருப்பது மற்றும் தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது சென்னை சில்க்ஸ் குழுமத்திற்கும் , எஸ் சி எம் நிறுவனத்திற்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க கூடிய வகையில் உள்ளது” என பரமசிவம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.