150 குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்குக் கல்வியை வழங்க உள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனியார் தொலைக்காட்டியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் அவரது தாயார் கையில் பாலாவிற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
மேலும், ருத்ரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்குக் கல்வியை வழங்க உள்ளேன். இந்த புதிய முயற்சியை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/offl_Lawrence/status/1645740954102693888?s=20
ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







