பிளஸ் 2 வேதியியல் தேர்வு – தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் வினாத்தாளில் பிழை இருந்ததால்,  அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1…

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் வினாத்தாளில் பிழை இருந்ததால்,  அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது.  இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு  25 ஆம் தேதி முடிவடைந்தது.  அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும்,  அதற்கான தேதிகளையும்  சமீபத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.  அதன்படி நேற்று முன்தினம் முதல் விடைத்தாள் திருத்தும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.  83 மையங்களில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருத்துதல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் வினாத்தாளில் ஏதேனும் கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டிருந்தால்,  அந்த கேள்விக்கு பதில் எழுதியுள்ள மாணவர்களுக்கு அதன் முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும்.  அந்த வகையில் இந்தாண்டு வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில் உள்ள 33-வது கேள்வி பிழையாக இருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் (3 மதிப்பெண்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.