நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நெல்லை மருத்துவமனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு போதிய ஆலோசனைகளை வழங்கவும், இதேபோன்ற சம்பவங்களை அரசு கையாள்வதற்கும் முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் மேற்படிப்பிற்கான செலவை தானே ஏற்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் காணொலி வாயிலாக தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். படுகாயமடைந்த 2 பேரும் வேலைக்கு செல்லும் வயதை எட்டியவுடன், மக்கள் நல்வாழ்வுத் துறையிலேயே பணி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மாணவன் சின்னத்துரையின் கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நெல்லை பன்னோக்கு மருத்துவமனைக்கு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் ரமேஷ், மருத்துவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீதர் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.







