தமிழ்நாடு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 7-ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்று அவற்றை விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 80 அடி சாலையில் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலம் புறப்பட்டு சென்றது. பலத்த காவல்துறை பாதுகாப்புடன், கோவை சாலை, ஜவஹர் பஜார், 5 ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்க விநாயகர் சிலைகளை எடுத்து சென்றனர்.
இந்த ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பொதுவானவர் என்றார். திமுக தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் செல்ல தேவையில்லை. ஆனால் முதலமைச்சர் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும்.
இந்துக்களை முதலமைச்சர் புறக்கணிக்கிறார். இது கண்டிக்கதக்கது. இதை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்துக்களை புறக்கணிப்பதுடன், கைது செய்யப்படுகிறார்கள். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகண்ட காவிரியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அவற்றை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கிறது என சாடினார்.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். அரசு நிவாரணப் பணிகளை செயல்படுத்த வேண்டும். வெள்ள நீரை நீர் நிலைகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து தமிழ்நாட்டில் அரசு மாடல் பள்ளிக்களை திறக்க வைக்கின்றனர். டெல்லியில் அர்விந் கெஜ்ரிவால் மும்மொழி கொள்கை, நவோதயா பள்ளிகள், புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைபடுத்தி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் இதை எதையும் அனுமதிப்பதில்லை. அரசு தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அரசு இருடடிப்பு செய்கிறது.
கடந்த ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்த அரசு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வருகை தர உள்ளார். சிறுபான்மையாக இந்துக்கள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அங்குள்ள கிருஸ்துவ மஷினரிகள் வெளி நாடுகளில் இருந்து நிதிகளை பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராகுல் காந்தி காங்கிரஸ் இந்திய காந்தி காங்கிரஸ் அல்ல, சோனியா காந்தி காங்கிரஸ். பொதுமக்களை ஏமாற்ற இங்கு ராகுல் காந்தி வருகை தருவதாக கூறிய அவர், ராகுல் கோபேக் என்ற முழக்கத்துடன் வருகிற 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








