தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தை வெளிநாட்டு பூங்கா போல் மேம்படுத்த திட்டம் – தமிழ்நாடு அரசு!

தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்துடன் செம்மொழி பூங்காவை சேர்த்து லண்டனில், துபாயில் உள்ள பூங்கா போல மேம்படுத்த உள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள…

தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்துடன் செம்மொழி பூங்காவை சேர்த்து லண்டனில், துபாயில் உள்ள பூங்கா போல மேம்படுத்த உள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் 534 சதுர அடி நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி 2011-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து ஜூன் 5-ம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்பாளராக இல்லாத நிலையில், விதிகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து இடத்தை எடுத்துள்ளதால், உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டக்கலை சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில் இடத்தை அரசு எடுத்துள்ளதாகவும், நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலத்தில் விளம்பரப் பலகைகள் வைத்து, வாடகை வசூலித்து தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தி உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. மீட்கப்பட்டுள்ள இந்த நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காபோலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் மேம்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரரான புவனேஷ் குமார் தரப்பில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் கூறினார். இந்த நிலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பதே நோக்கம் என புவனேஷ் குமார் மேலும் கூறினார். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.