குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து, காலையில் இருந்து கிடைத்த தகவல் தொகுப்பை பார்ப்போம்.
காலை 11.47 மணி அளவில், Mi-17V5ரக ஹெலிகாப்டரில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. நண்பகல் 12.20 மணிக்கு, ஹெலிகாப்டர் நஞ்சப்ப சத்திரம், காட்டேரி அருகே விபத்து நடந்தது உறுதியானது. அந்த விபத்தில் முப்படைத்தளபதி மற்றும் அவரது மனைவி பயணித்ததாக தகவல் வெளியானது.
பிற்பகல் 1 மணிக்கு, பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிய நிலையில் மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மதியம் 2 மணி அளவில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. மதியம் 2.15மணிக்கு, ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது.
மதியம் 2.20மணிக்கு, விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மதியம் 2.30மணி அளவில், மீட்புப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வதாக தகவல் வெளியானது.
மதியம் 3மணி அளவில், தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதாக தகவல் வெளியானது. மதியம் 3.10 மணிக்கு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். மாலை 4.46 மணி அளவில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ தகவல் தெரிவித்தது. மாலை 5.10மணிக்கு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக்கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், மாலை 6.00 மணி அளவில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறித்தது.










