பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – பிரதமர் மோடி இரங்கல் பதிவு..!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான போகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவலின் படி, செவ்வாய்க்கிழமை இரவு 7.29 மணியளவில் ஏற்ப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.மேலும் நிலவரப்பில் இருந்து 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான சேதம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா பிலிப்பைன்ஸுடன் ஒற்றுமையாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.