துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் – Kovilpatti இல் பரபரப்பு! நடந்தது என்ன?

கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நாலாட்டின்புதூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்த…

Petrol station owner abducted at gunpoint - Pandemonium in Kovilpatti! What happened?

கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நாலாட்டின்புதூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்த சூழலில், முத்துக்குமார் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அப்போது பெத்தேல் அருகே சென்ற போது அவர் பின்னால் இரு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நாலாட்டின்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ், அந்த கார்களை துரத்திச் சென்றார்.

விடாமல் துரத்திச் சென்ற அவர் கோபாலபுரம் விலக்கு – இடைச்செவல் இடையே ஒரு காரை மடக்கிப்பிடித்தார். காரை நிறுத்தியதும் கார் டிரைவர் தப்பியோடியதாக தெரிகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் காரில் பார்த்து போது நெல்லையைச் சேர்ந்த ஐயப்பன், தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரும் முத்துக்குமாரை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் அவர்களிடமிருந்து முத்துக்குமாரை மீட்டார்.

மேலும் அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், காரில் இருந்த துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட காரில் பாஜக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தாக தெரிகிறது. அதனுடன், அந்தக் காரில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கு வழங்கப்படும் கார் பாஸ் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், கார் பாஸ்சில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது அப்துல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் காரில் வாக்கி டாக்கி ஒன்றும் இருந்தது. தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கடத்தப்பட்ட முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய பெட்ரோல் பங்கை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டேன். என்னிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட எனது உறவினர் தம்பி முறைவரும் கழுகுமலையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தூண்டுதலில் பேரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது” என குற்றம் சாட்டினார்.

கடத்தப்பட்ட முத்துக்குமார்

குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன் முத்துக்குமாரின் பங்கில் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே 33 லட்ச ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டு, இது தொடர்பாக கழுகுமலை, நாலாட்டின்புதூர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

முத்துக்குமாரை கடத்துவதற்காக இரண்டு கார்களில் மொத்தம் 9 பேர் வந்தனர். கடத்த வந்தவர்களில் ஒருவர் முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முத்துக்குமார் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு காரணத்திற்காக கடத்தப்பட்டாரா? என்பது முழு விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும். இந்தச் சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.