மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தன. இந்த நிலையில்தான் இழப்பை ஈடுகட்டும் விதமாக எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.46 பைசாவும், டீசல் 2.57 பைசாவும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4-வது முறையாக உயர்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆக விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக விற்பனையாகிறது.







