முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் கோரி அவரது சார்பில் தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்த மனுவை அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 15ஆம் தேதிக்கு பிறகு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களால் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் போதுமான அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சரும் இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர்களால் ஏனைய சமூக விரோதிகளால் இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே இவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு காவல் துறை டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.








