கழிப்பறைகளுடன் கூடிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன், நீண்ட தூரம் செல்லும் பயணிகளின் தேவைக்காகவும், சிரமம் கருதியும் கழிப்பறைகளுடன் கூடிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பேருந்து நிலையங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி நவீன வசதிகளுடன் அதை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் ( SEZ ) அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பிரபாகரன், தமிழ்நாட்டில் கல்விச் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா போன்றவற்றை அரசே நடத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.








