டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தியதால் நாள்தோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்‘ என்ற நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று உரையாற்றிய அவர், பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது சிறு கிராமங்களிலும்கூட, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை அமலில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்படுவதன் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், நாட்டில் தினமும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அடிப்படை தேவை. வால்மீகி எழுதிய ராமாயணத்திலும், தண்ணீரின் சேமிப்பு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கோடைகாலம் என்பதால், அனைவரும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் 88-வது மனதின் குரல் நிகழ்ச்சியை சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேட்டார். அதேபோல, செங்கல்பட்டில் தமிழ்நாட்டுக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டறிந்தார்.