மீண்டும் பொது முடக்கம் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், அந்த பட்டியலில் தமிழ்நாடும் இருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா சிகிச்சை மையங்களை திறக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், வயது வரம்பைத் தளர்த்தி அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது என்று கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணியாவிட்டால் கொரோனா கண்டிப்பாக பரவும் என எச்சரிக்கை விடுத்தார்.







