ரூ.500 செலுத்தி ஒரு நாள் சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் திட்டத்தை, பெலகாவி இண்டல்கா மத்திய சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருக்கிறது, இண்டல்கா மத்திய சிறைச்சாலை (Hindalga jail). 1923 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சிறைச்சாலை, கர்நாடக மாநிலத்தின் பழமையான சிறைகளில் ஒன்று. இப்போது இந்தச் சிறையில், விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் இந்த சிறையில் முக்கிய பிரமுகர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த பழமையான சிறையை பார்வையிட அனுமதி கோரிக்கைகள் அதிகம் வருவதால், சிறை நிர்வாகம் புதுமையான திட்டத்தை செயல்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதாவது, ‘சிறையில் ஒரு நாள்’ என்ற திட்டம்தான் அது. பொதுமக்கள் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் அந்தச் சிறையில் 24 மணி நேரம் கைதி போல வாழலாம். கைதி எண், கைதிக்கான சீருடை, சிறை அறை எண் வழங்கப்படும். அவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. கைதி போலவே நடத்தப்படுவார்கள்.
காலை 5 மணிக்கு டீ, 6.30 மணிக்கு டிபன், 11 மணிக்கு சாப்பாடு, 7 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். கைதிகளைப் போலவே தோட்டத்தொழில், சமையல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சிறையில் கைதிகள் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்தால், அவர்களுக்கு குற்றம் செய்யும் எண்ணம் தோன்றாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.