பட்டுக்கோட்டை அருகே கோயில் சிலைகளை திருடியதாக வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் வலங்கைமானில் வட்டார கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை, குறிஞ்சி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த போது விஸ்வநாத சுவாமி கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அக் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், மூஞ்சூறு கற்சிலைகள் சில நாட்களாக காணாமல் போகின. இச் சம்பவம் குறித்து கோயிவல் செயல் அலுவலர் கடந்த மார்ச் மாதம் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விசாரணையில் இரண்டு கற்சிலைகளை வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் செல்லத்துரை திருடியதாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்து அவர் வசம் இருந்த கற்சிலைகளை மீட்டுள்ளனர்.







