கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு (96) இன்று காலமானார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்ட இவர் 2007ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும், 2009ல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.
இவர் எழுதிய ‘முக்கூடல்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
புவியரசு மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “:கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா… நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




