40 ஆண்டுகளுக்கு பிறகு, நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்குகிறது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு 7ம் தேதி வந்தது.
இந்த கப்பல் சோதனை ஓட்டம் 8ம் தேதி நடந்தது. இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சென்ற கப்பல், அங்கிருந்து புறப்பட்டு நாகை திரும்பி வந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததால், வரும் 9ம் தேதி நடக்க இருந்த சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த கப்பலில் பயணிக்க பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு செல்ல, முதல் நாளில் பயணிக்க 35 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.







