திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு முன் ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் பழனி கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் பெண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலலமையேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை ஐஜி அஸ்ராகர்க், மாவட்ட ஆட்சியர் விசாகன், டிஐஜி அபினவ் குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற இருப்பதால் வருகிற 23ம்தேதி முதல் 27ம்தேதிவரை நவபாஷாண மூலவர் சிலையை தரிசனம் செய்யமுடியாது என்றும், எனவே பாதயாத்திரை வரும் பக்தர்கள் நவபாஷாண சிலையை தரிசனம் செய்யவேண்டும் என்றால் குறிப்பிட்ட நாட்களில் பழனி கோவிலுக்கு வருவதை தவிர்த்து கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கும்பாபிஷேகத்தில் முன்னிட்டு பழனி-தாராபுரம் சாலையில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்படும் என்றும், அங்கிருந்து பக்தர்கள் பழனி நகருக்குள் வர கட்டணமில்லா சிறப்பு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் கும்பாபிஷேகத்தின் போது மலை கோவிலுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதில் 58 வயதிற்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவிஐபி பாஸ் உள்ளவர்கள் என ஆயிரம் பேர் மட்டுமே ரோப்கார் மற்றும் மின்இழுவைரயில் ஆகியவற்றில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் படிப்பாதை வழியாக மட்டுமே செல்லவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மலைக்கோவில் பிரகாரத்தை 39 இடங்களாக பிரித்து ஒவ்வொரு இடத்திலும் 100 முதல் 150 பேர் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அங்கிருந்து சாமிதரிசனம் செய்யும் வழி, பாதுகாப்பாக வெளியேறுவது மற்றும் பழனி அடிவாரம் பகுதியில் மூன்று இடங்களில் 70 ஆயிரம் பேர்வரை சாப்பிடும் வகையில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பழனி குடமுழுக்கு விழா நிகழ்வை முழுமையாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியிலும், நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் பக்கத்திலும் நேரலையாக காணலாம்.