வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வரும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களது உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பிரிவில் ராணிப்பேட்டை, வேலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவர்களது உயிரிழப்புக்கு காரணம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.







