சொந்த கட்டடம் இல்லாத நியாயவிலைக்கடைகளுக்கு அரசு சார்பில் கட்டடம் கட்டித்தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகம் முழுவதும் 6,970 நியாயவிலைக்கடைகள் தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் அரசு கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு கட்டடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு அரசு கட்டடங்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
“இதனையடுத்து மண்டலங்களின் தனியார் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளுக்கு அரசு கட்டிடங்கள் கட்ட ஏதுவான இடங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் உதவியுடன் அடையாளம் கண்டு அவ்விடங்கிளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி/நாடாளுமன்றம் தொகுதி மேம்பாட்டு நிதி போன்ற நிதிகள் மூலம் தேவையான நியாயவிலைக்கடை கட்டிடங்களை கட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.” என அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.








