தமிழ்நாடு காவல்துறை துவங்கியுள்ள ஆபரேஷன் கஞ்சா வேட்டையின் மூலம் கடந்த ஆறு நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” தமிழ்நாடு முதலமைச்சர் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அந்த ஆணையின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் கஞ்சா வேட்டை 1:0, 2:0, 3:0 நடந்து முடிந்தன. மீண்டும் கஞ்சா விற்பனை தலை தூக்கவிடாமல் தடுக்க கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் 01.05.2023 முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆறு நாட்களில் தமிழகம் முழுவதும் 659 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 41 வங்கி கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில் 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த இரகசியம் காக்கப்படுவதுடன், தக்க பண வெகுமதியும் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.