ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ…

சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

இதைத்தொடர்ந்து சூடான் போர் நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் காவிரி” எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதில், முதற்கட்டமாக 278 இந்தியர்கள் ஐ.என்.எஸ். கப்பல் வாயிலாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.