“வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது.  இதனால் மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.  திருச்சி,  அரியமங்கலம் பால்பண்ணை…

வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது.  இதனால் மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

திருச்சி,  அரியமங்கலம் பால்பண்ணை அருகே அமைந்துள்ள வெங்காய மண்டியிலிருந்து திருச்சி,  தஞ்சை, புதுக்கோட்டை,  அரியலூா்,  பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனா்.  இதனிடையே வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்துள்ளது.  இதன் காரணமாக,  சின்ன வெங்காய ஏற்றுமதி குறைந்துள்ளதால்,  விற்பனை மந்தமாகி தேக்கம் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வெங்காய தரகு வா்த்தக மண்டி வியாபாரிகள் சங்க செயலாளரும் மண்டி உரிமையாளருமான தங்கராஜ் கூறியதாவது, “திருச்சியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  சின்ன வெங்காய வரத்து,  நாளொன்றுக்கு 400 முதல் 500 டன்களாக இருந்தது.  அதே அளவுக்கு பெரிய வெங்காய வரத்தும் இருந்தது.  பெரிய வெங்காயத்தின் வரத்து அதே நிலையில் உள்ளது.  ஆனால், சின்ன வெங்காயத்துக்கு தற்போது சீசன் இல்லை என்பதால், அதன் வரத்து 150 முதல் 200 டன்களாக குறைந்துவிட்டது.

தற்போது பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை செய்ய இன்னும் 2 மாதங்களாகும்.  இதனால் இந்த குறைவான வெங்காய வரத்து இன்னும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.  வெங்காயத்தை பயிா் செய்த விவசாயிகள் இருப்பு வைத்து விற்பனை செய்தால் விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் ஒரு மாத காலமாக இருப்பு வைத்திருந்தனா்.  ஆனால் அதன் விலை அதிகரிக்கவில்லை, மாறாக அதன் எடைதான் குறைந்தது.

மதுரையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு.!! கிலோ ரூ.190க்கு விற்பனை - News7 Tamil

மலேசியா,  சிங்கப்பூா்,  இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்துள்ளது.  வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முன்கூட்டியே அரசுக்கு 40% வரித்தொகை செலுத்த வேண்டியிருப்பதால்,  விவசாயிகள் வரியை செலுத்த இயலாத நிலை உள்ளது.  இதனால் கடந்த 15 நாள்களாக சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படவில்லை.

அழுகக் கூடிய பொருளான வெங்காயத்திற்கு மத்திய அரசு 40 சதவீத வரி விதித்துள்ளது முறையானது அல்ல.  சின்ன வெங்காயம் தற்போது ரூ.40 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இவ்வாறு விற்பனை செய்யப்பட்டால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.  இதனால், மத்திய அரசு வெங்காயத்துக்கு விதித்த வரியை ரத்து செய்ய வேண்டும்” என்றாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.