ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடும் திருவோணம் பண்டிகை செப்டம்பர் 7 முதல் நான்கு நாட்கள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. திருவோணம் செப்டம்பர் 8இல் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தவர் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் வரும் 8ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில், பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதற்கு பதில், வேறொரு நாளில் வேலைநாளாக கடைப்பிடிக்கப்படும்.கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக கேரளாவில் கொண்டாட்டங்கள் இல்லை. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் ஓணம் பண்டிகை களைகட்டி உள்ளது.
ஓணம் பண்டிகை பூஜைகளுக்காக சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் நடை செப்டம்பர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் வளாகம் 7.09.2022 முதல் 10.09.2022 வரை திறந்திருக்கும். உத்திராட நாள் முதல் சதயம் வரை பக்தர்களுக்கு ஓணம் சத்யாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் திறந்திருக்கும் 5 நாட்களும் உதயாஸ்தமய பூஜை, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம், படிபூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். 10ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை மூடப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு மெய்நிகர் வரிசை முறையைப் பயன்படுத்த வேண்டும். நிலக்கல்லில் பக்தர்களுக்காக ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
-ம.பவித்ரா