பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 8 லட்சம் ரூபாய் வருமான வரம்பாக எதன் அடிப்படையில் நிர்ணயித்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களையும், இடைக்கால நிவாரணம் கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இடையீட்டு மனு தாக்கல் செய்தது தொடர்பாக ஆஜரான திமுக தரப்பு வழக்கறிஞர், ஓ.பி.சி.க்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்துவதற்கு தடை விதிக்கக்கூடாது என வாதிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்தீர்கள் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 லட்சம் ரூபாய் வருமானம் என்பதை டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும், மாநகரங்களிலும், சிறு, குறு நகரங்களிலும், ஒன்றாக கருத முடியுமா ? என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மனித வருமானம் மாறுபாட்டதாக இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக இந்த வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்றும், நீதிபதிகள் வினவினர். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறை தொடர்பாக. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.